Friday, April 24, 2015

கடவுள் 1: அதுவா? அவரா?


எங்கு தேடினாலும் யாரை கேட்டாலும், இது தான் கடவுள் என்று உறுதியான விடை எதுவும் கிடைத்தபாடில்லை. மிக சிறு வயதில் எனக்கு தெரிந்த கடவுள் சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள்தான். கொஞ்சம் காலம் சென்ற பிறகு ஏசு, அல்லா, புத்தர் என்று இன்னும் சில கடவுள்கள். இன்னும் கொஞ்ச காலம் சென்ற பிறகு உலகின் பல்வேறு இனங்கள், நாகரிகங்கள் எத்தனையோ கடவுள்களை அறிமுகம் செய்தன. இவர்களில் யார் கடவுள் என்று குழம்பி கொண்டிருக்க, சில பேர் இவர்கள் யாரும் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசினர்.
கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கும், இல்லை என்பவர்களுக்கும் பொதுவாக ஒன்றை சொல்ல ஆசைபடுகிறேன். எதோ ஒரு நாத்திகர் சொன்னார் கடவுள் இல்லை என்று, அதனால் கடவுள் இல்லை, எதோ ஒரு சாமியார் சொன்னார் கடவுள் இருக்கிறார் என்று, அதனால் கடவுள் இருக்கிறார். என்று முடிவுக்கு வந்தால் மனிதனின் தனி சிறப்பான பகுத்தறிவில் இருந்து நீங்கள் விலகியே நிற்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று “நீங்கள்” ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் அதுதான் “பகுத்தறிவு”.
கட்டுரையின் தலைப்பை “யார் கடவுள்?” என்றா, இல்லை “எது கடவுள்?” என்று வைப்பதா என்று குழம்பி போய்விட்டேன். ஏனெனில் இவ்வளவு குழப்பத்தில் கடவுளுக்கு உயிர் இருக்கிறதா, இல்லையா என்று முதலில் ஆராய வேண்டும் ஏனெனில் அதுதான் “யார்” அல்லது “எது”. என்பதை முடிவு செய்யும். உயிர் இருந்தால் யார் கடவுள் இல்லையேல் எது கடவுள் என்று முடிவு செய்யலாம்.
சரி உயிர் இருக்கிறதா இல்லையா என முடிவு செய்வதென்ன என்று யோசித்து பார்த்தால். “அசைவு” என்று விடை கிடைக்கும். அசைவில்லையேல் நமக்கு உயிர் இல்லை என்று முடிவு செய்யப்படும். நம் நாட்டில் வாழ்ந்த சில சித்தர்கள் உயிருடன் இருக்கும் போதே உடல் அசைவை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் இறந்து போய்விட்டனர் என்று நம் மக்கள் அவர்களை எரித்து விட்டனர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
மனிதன் உட்பட பல மிருகங்கள் அதிகமாக இயங்குவதால் அவைகளுக்கு உயிர் உண்டென்பதை உணர்கிறோம். தாவரங்கள் மெதுவாக இயங்குவதால் பல நேரங்களில் அவைகளும் உயிர்கள்தாம் என்பதை மறந்து விடுகிறோம். உலோகங்களும், அலோகங்களும் தனிச்சையாக இயங்காததால் அவைகள் உயிரற்றவை என்கிறோம்.
மின் விசிறி அசைவை வைத்து அதற்கு உயிர் உள்ளது என முடிவுக்கு வரலாமா? இல்லை. அவை switch போட்டால் தான் அசைகிறது எனலாம். ஆனால் மனிதர்களும் அப்படிதானே தேவை ஏற்படும் போதுதானே அசைகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலோகத்திலும் சரி அலோகத்திலும் சரி, நீங்கள் அணு அளவுக்கு சென்று சிந்தித்தால் எலக்ட்ரான்கள் தன்னிச்சையாக தானே அசைந்து கொண்டிருகின்றன.
ஜகதீஷ் சந்திர போஸ், இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி. அவருடைய நண்பர் ஒருவருக்கு உயிர் பற்றி சில சோதனைகளை செய்து காட்டியிருக்கிறார். அவர் நண்பரின் வார்த்தைகளிலேயே இங்கே நான் சொல்கிறேன். நண்பர் கூறுகிறார்......
என்னை அவருடைய அமைதியான ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்றார்.
“நான் இந்த பெரணி செடியுடன் தாவர உருப்பெருக்கியை இணைக்கிறேன். அதன் பெரிதாக்கும் தன்மை பிரம்மாண்டமானது. ஒரு நத்தை ஊர்வது இதன் முன் பெரிது படுத்தப்படுமானால் அது ஒரு துரித ரயில் வண்டி போவது போல் தோற்றமளிக்கும்.” என்றார் போஸ்.
என் பார்வை ஆவலுடன் அந்த பெரணி திரையில் தெரிவதை நோக்கியது. நுட்பமான உயிர் சலனங்கள் இப்போது நன்கு தென்பட்டன. அந்த செடி வசீகரிக்க பட்ட என் கண் முன்னால் மெதுவாக வளரலாயிற்று. அந்த விஞ்ஞானி ஒரு உலோக துண்டால் பெரணியின் ஒரு முனையை தொட்டார். ஊமை நாடகம் போன்று விரிவடைந்த அந்த செடியின் அசைவு திடீரென நின்றது. அந்த தண்டை அகற்றியவுடன் அதன் சலனம் சுறுசுறுப்பாக தொடங்கியது.
அந்த மகா விஞ்ஞானி இன்னும் ஒரு கருவியை காண்பித்தார்.
“நான் உங்களுக்கு ஒரு தகரத் துண்டில் சில பரிசோதனைகள் செய்து காண்பிக்கிறேன். உலோகங்களில் உள்ள உயிர் சக்தி வெளி தூண்டல்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ இயங்குகின்றன. மை அடையாளங்கள் இவற்றின் பலவித எதிர் செயல்களை எடுத்து காட்டும்” என்றார் போஸ்.
நான் மிகுந்த ஈடுபாட்டுடன் அணு அமைப்பின் தனித்தன்மை பொருந்திய அலைகளை பதிவு செய்யும் வரைபடத்தை கவனித்தேன். போஸ் மயக்க மருந்தை தகரத்தின் மீது தடவியதும் அலையதிர்வுகளின் பதிவு நின்று விட்டது. அந்த உலோகம் மெதுவாக சுய நிலையை அடைந்ததும் அதிர்வுகள் மறுபடியும் பதியலாயின. இப்போது அதன் மீது நச்சு பொருள் ஒன்று தடவப்பட்டது. உடனே அத்தகர துண்டு துடித்தது அவ்வரை படத்தின் ஊசி திடீரென மரண அறிக்கையை அறிவித்தது.
போஸ் கூறினார்... “கத்தரிகோல், இயந்திரங்கள் போன்றவற்றில் இருக்கும் உலோகங்கள் களைப்படையக்கூடும். சில காலம் அவற்றிற்கு ஓய்வளித்தால் அவை நன்கு செயல் படுகின்றன என்பதை போஸ் கருவிகள் நிரூபித்து காட்டியுள்ளன” என்று முடித்தார்.
.
.
உலகத்தில் உயிரற்ற பொருள்கள் எதுவுமே இல்லை...
கடவுள் இருக்கிறாரா, இல்லையா... நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.. ஒருவேளை இருந்தால், யாரா? எதுவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment